Sunday, June 17, 2018

மின்ட்டு




கதைச் சுருக்கம்


மின்ட்டு பறந்து சென்று கொண்டிருந்த போது ஒரு பழுத் பலாப் பழத்தின் வாசைன அதன் மூக்கை துளைத்தது. அதைச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மின்ட்டுவுக்கு ஏற்பட்டது.

எனவே அது பழத்துக்கு அருகே சென்று தனது சிறிய சொண்டால் பழத்தைக் கொத்தியது. அதன் சொண்டு பழத்துக்குள் சொருகிவிட்டது.

சொண்டை எடுக்கவியலாமல் தவித்தது மிண்ட்டு.

தலையை உசுப்பி உசுப்பிப் பார்த்தது.

தன் நிறிய கால்களால் பலாப் பழத்தை தள்ளிப் பார்த்தது.

சொண்டு பலாப் பழத்தில் சொருகி விடுபட்டுவிடுமோ என்று பயந்தது,

குருவிக் கூட்டம் பறந்து வர மிண்டு கத்திக் கத்தி அவர்களைக் கூப்பிட்டது.

குருவிகள் பழத்தைக் கொத்தி, பழம் விழுந்து சிதறியது.

மிண்ட்டு மகிழ்ச்சியாய் பறந்தது.




புத்தகத்திற்கான பக்க ஒதுக்கீடும் வாக்கிய அமைப்பும்.

01.      Title Page

02.  பலாப் பழத்தின் வாசனை வருகிறதே

03.  அதைச் சாப்பிட வேண்டுமே

04.  அதோ பலாப் பழம்.

05.  என்ன இவ்வளவு முட்கள்?

06.  சொண்டினால் கொத்தியது மின்ட்டு.

07.  மாட்டிக் கொண்டேனே

08.  எப்படி விடுபடுவது?

09.  தலையை உசுப்பிப் பார்த்தது.

10.  தலை வலிக்கிறதே...

11.  கால்களால் தள்ளிப் பார்ப்போம்.

12.  எனக்கு என் சொண்டு வேண்டும்

13.  குருவிகள் பறந்து வந்தன.

14.  மிண்ட்டு உதவி கேட்டது.

15.  பலாப் பழத்தை குருவிகள் கொத்தின.

16.  மகிழ்ச்சியாக பறந்தது மின்ட்டு.

Friday, January 27, 2012

வெளிச்சம் தேடிய எலி

எலியொன்று தனது பொந்துக்குள் இருட்டில் தனியாக இருக்க பயப்பட்டது. அது தனது பொந்துக்குள் வெளிச்சம் பரப்பினால் நல்லது என எண்ணியது. இரவு முழுவதும் என்ன செய்யலாம் என்று சிந்தித்தது.

அடுத்த நாள் காலையில் தனது பொந்தைவிட்டு வெளியே வந்த எலியிடம் வழக்கம் போல சூரியன் காலை வணக்கம் சொன்னது. பதில் சொன்ன எலி சூரியனிடம் தனது ஆசையைக் கூறியது.



'சுரிய நண்பா. எனக்கு இருட்டில் தூங்க பயமாக இருக்கிறது. எனது வீட்டுக்கு வருகிறாயா?' என்றது.

அதற்கு சூரியன்

'நான் வருவதற்கு உனது பொந்தில் இடம் போதாது. அத்துடன் எனது வெப்பத்தையும் நீ தாங்கிக் கொள்ளமாட்டாயே' என கூறியது.

இரவில் எலி நிலாவைக் கண்டு தனது விருப்பத்தைக் கூறியது.

அதற்கு நிலா

'நான் இரவில் வாகத்துக்கு துணையாக இருக்க வேண்டுமே. என்னால் வர முடியாது' என்றது.




சிந்தித்த எலி நட்சத்திரத்திடம் தனது துயரத்தைக் கூறி அழுதது.

'எலி நண்பா. நான் காலை விடியுமுன்னே போய்விட வேண்டும். என்னால் உன் வீட்டுக்கு வர முடியாது. என்னை மன்னித்துக்கொள்' என்றது.

எலிக்கு சரியான கவலை. அது தனது வீட்டு வாசலில் குந்தியிருந்து இருட்டில் பயத்துடன் அழுது கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக மின்மினிப்பூச்சி பறந்து வந்தது.
உடனே எலிக்கு பளிச்சென ஒரு யோசனை தோன்றியது. எனவே அது மின்மினியிடம் தனது பிரச்சனையைக் கூறியது.

எலி சொன்னதைக்கேட்டு கவலையடைந்த மின்மினி ஒவ்வொரு இரவிலும்; தான் வந்து துணையாயிருப்பதாகவும், வெளிச்சம் தருவதாகவும் கூறியது.

அன்றிலிருந்து இரண்டும் நல்ல நண்பர்களாய் வாழ்ந்து வந்தன.

தலையணையில் தூங்க நினைத்த காகம்

மொட்டை மாடியில் வயதான ஒருவர் தலையணையில் தலைவைத்து சுகமாக தூங்குவதை ஒரு காகம் கண்டது. கம்பிகளும், தும்புகளும் அடங்கிய கூட்டில் தானும் தனது குஞ்சுகளும் தூங்குவதை எண்ணிப் பார்த்து கவலையடைந்தது. தாங்களும் தலையணை ஒன்றில் இவ்வாறு தூங்கினால் எவ்வளவு நல்லது என எண்ணியது காகம்.

ஒருநாள் அது தலையணையை எடுப்பதற்காக ஒரு வீட்டினுள் மெதுமெதுவாக அடியெடுத்து வைத்தது. தூரத்திலிருந்த ஒரு நாய் காகத்தைக் கண்டு கோபத்துடன் ஓடி வந்தது. இதைக்கண்ட காகம் தப்பித்தோம் பிழைத்தோம் என்று பறந்து வந்துவிட்டது.



இன்னொரு முறை யன்னலினூடாக காகம் நுழையப் பார்த்தது. அப்போது அங்கே வந்த வீட்டுப்பெண் காக்கையைக் கண்டதும் கோபப்பட்டு சூ சூ என்று காகத்தை விரட்டிவிட்டாள்.
அடுத்த நாள் அந்த வீட்டிலுள்ள தலையணையை காயப்போட்டிருப்பதை காகம் கண்டது. மகிழ்ச்சியுடன் காகம் தலையணையை நோக்கி வந்து கொத்திப் பார்த்தது.

அது கஷ்டப்பட்டு தனது கால்களாலும், சொண்டாலும் மிருதுவாக இருந்த தலையைணையை இழுக்கப் பார்த்தது. தலையணை பாரம் அதிகமாக இருந்ததால் அந்த முயற்சியிலும் காகம் தோற்றுவிட்டது.

ஒருநாள் இரை தேடுவதற்காக வெளியே சென்ற காகம் தையற்கடை ஒன்றின் முன்னால் உள்ள மரத்தில் இளைப்பாறியது. அப்போது அந்த தையற்காரன் பஞ்சுகளை வைத்து தலையணை தைப்பதைக் கண்டது.

'அடடா. இது தான் நம் காட்டில் இருக்கிறதே. இலவ மரத்திடம் போய் கேட்போமே'

என்று மகிழ்ந்த காகம் உற்சாகத்தோடு காட்டை அடைந்தது. அங்கிருந்த இலவ மரத்திடம் தனது ஆசையைக் கூறி பஞ்சைக் கேட்டது.

இலவம்பஞ்சை எடுத்துக்கொள்ளுமாறு மரமும் கூறியது. அதை பத்திரமாக சேகரித்த காகம் சின்ன தலையணை ஒன்றை அமைத்துக்கொண்டு குஞ்சுகளுடன் சுகமாக தூங்கியது.

Wednesday, January 18, 2012

எல்லோரும் மனிதர்கள் தான்!

எல்லோரும் மனிதர்கள் தான்!


கமாலும், பரீதும் இணை பிரியாத நண்பர்களாக வாழ்ந்து வந்தார்கள். இருவரும் ஒரே வகுப்பில் கல்வி கற்று வந்தனர். இருவருக்கும் பத்து வயது ஆகியிருந்தது. கமாலின் தந்தை ஊரிலேயே பெரும் செல்வந்தர். அவரை அவ்வூரில் உள்ள யாவரும் மிகவும் மதித்தனர்.

ஆனால் பரீத் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவன். பரீதின் தந்தை மரக்கறி வியாபாரம் செய்து வந்தார். ஆதலால் மழைக்காலங்களில் அவர்கள் சிலநாட்கள் பட்டினியில் வாடுவார்கள். யாரிடமும் தமது கஷ்டங்களைக் கூறி உதவி கேட்க மாட்டார்கள். பரீதின் தந்தை ஏழை என்றாலும் சிகரட், மதுபானம் என்று எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாதவர். ஐந்து நேர தொழுகையையைப் பேணுதலாக தொழக்கூடியவர்.



கமாலின் தந்தை இவற்றுக்கு நேர் எதிரானவர். அவர் பணத்திமிரால் ஊரில் உள்ள ஏழைகளை மதிக்கமாட்டார். சொகுசு காரில் ஆடம்பரமாக ராஜா என்ற நினைப்பில் உலா வருவார்.

தாம் கஷ்டப்படுவதைப் போல் தமது பிள்ளைகளும் கஷ்டப்படக் கூடாது என்ற எண்ணத்தில் பரீதையும் நல்ல பாடசாலையில் சேர்த்திருந்தார் அவரது தந்தை. கமாலும் அதே பாடசாலை என்பதால் பரீத், கமாலின் பணக்கார தோற்றத்தைக் கண்டு வியந்திருக்கிறான்.

அயன் களையாத சேர்ட், பளிச்சிடும் சப்பாத்து, அழகிய பாடசாலை பேக், வர்ண மயமான தண்ணீர் போத்தல் என்பவற்றுடன் நிறந்தீட்டும் பென்சில், வர்ண வர்ண பேனாக்கள், பெரிய அழிறப்பர் என்று அழகான பொருட்களை கமால் கொண்டு வருவான். அதைப் பார்க்கும்போது பரீதுக்கு மிகவும் ஆவலாக இருக்கும். அவற்றை தொட்டுத் தொட்டு பார்ப்பான்.

அதுமட்டுமல்லாமல் கமால் இடியப்பம், நூடுல்ஸ், பயறு என்று விதவிதமான சாப்பாடு வகைகளைக் கொண்டுவருவான். இதையெல்லாம் பார்க்கும் போது பரீதுக்கும் ஆசை வரும். ஆனாலும் 'உள்ளதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும்' என்று பரீதின் தாய் சொல்லிக்கொடுத்து இருந்த விடயம் பரீதுக்கு ஞாபகம் வரும். தந்தையும் வறுமையால் கஷ்டப்படுவதை எண்ணிவிட்டு பேசாமல் இருந்துவிடுவான்.

பரீதிடம் இருப்பது கிழிந்த பாடசாலை பேக் ஒன்றும், குச்சி பென்சில் ஒன்றும், கசங்கிய ஆடைகளும் தான். பொலித்தீன் பையில் தான் அவன் தினமும் ரொட்டியை சுற்றிக்கொண்டு வருவான். நிறம் மங்கிப்போன பிளாஸ்டிக் போத்தல் ஒன்றில் சுட்டு ஆறிய நீரை எடுத்துக்கொண்டு வருவான்.

இருவரும் ஒன்றாக இருந்து சாப்பிடுவார்கள். பரீத் வெளியே சென்று கையைக் கழுவிவிட்டு வந்து அல்லாஹ்வைப் புகழ்ந்தவாறு சாப்பிட ஆரம்பிப்பான். அவன் செய்வதையே கண்கொட்டாமல் பார்த்துவிட்டு கமால் அவனிடம்,

'ஏன் பரீத் ரொட்டி தானே கொண்டு வந்திருக்கிறாய். அதை லேசாக சாப்பிடலாம் தானே? ஏன் கை கழுவுகிறாய்?' என்று கேட்பான். அதற்கு பரீத்,

'இல்ல கமால் கை கழுவிவிட்டு சாபபிடுவதுதான் ஆரோக்கியம் என்று சுகாதாரப்பாட டீச்சர் சொல்லித் தந்தாங்களே. அத்துடன் நாம் சாப்பிடும் போது அல்லாஹ்வை மறந்துவிடக் கூடாது என்று உம்மா சொல்லித் தந்திருக்காங்க' என்றான்.

கமாலுக்கு கவலையாக இருந்தது. அவனது தாய் எந்நேரமும் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருப்பாள். சாப்பாடு கேட்டாலும் போட்டுச் சாப்பிடு என்பாள். எப்போதும் வீட்டில் கோழிக்கறி, இறைச்சி, மீன் என்று ஆடம்பர கறிகள் தான்.

பரீத் கொண்டு வருவது போல கீரைச் சுண்டல், வட்டக்காய் கறி, நெத்தலி பொரியல் ஆகியவற்றோடு சாப்பிட்டால் எவ்வளவு ருசியாக இருக்கும் என்று நினைப்பான். அதைப் பெற்றோரிடம் சொன்னால் அடிதான் கிடைக்கும். அதனால் பரீதின் சாப்பாட்டை மிகவும் ஆசையுடன் சாப்பிடுவான் கமால்.

ஒருநாள் அதிபரை சந்திக்க வந்திருந்த கமாலின் தந்தை, பரீத் தனது மகனுடன் சேர்ந்து சாப்பிடுவதைக் கண்டுவிட்டார். பாடசாலை என்றுகூட பார்க்காமல் பரீதை அறைந்துவிட்டார். கமால் அழுது கெஞ்சியும் அவர் பரீதை முறைத்துக்கொண்டே இருந்தார்.

கண்களால் பரீதிடம் மன்னிப்பு கேட்டான் கமால். தந்தை தரதர என்று கமாலை இழுத்துச் சென்று காரில் தூக்கிப் போட்டார். போகும் வழியில் எல்லாம் கமாலை திட்டிக்கொண்டே போனார்.

'காலை உடைப்பேன் ராஸ்கல். உன்னப்போல எத்தனை பணக்காரப் பிள்ளைகள் அந்தப் பாடசாலையில் படிக்கிறாங்க? உனக்கு அந்த மரக்கறிகாரன்ட மகன் பரீத் தான் நண்பனாக கிடைச்சானா?' என்று கேட்டார். 'உன்னை வேறு பாடசாலைக்கு மாத்தினால்தான் சரி. இல்லாட்டி இந்த கையேந்திகளோடதான் பழகுவாய்' என்று முணுமுணுத்துக்கொண்டே வந்தார்.

எதிரில் பெரிய லொறி ஒன்று வந்துகொண்டிருந்தது. கமால் கண்டுவிட்டு 'வாப்பா...!' என்று அலறினான். ஒரு கணத்துக்குள் எல்லாமே நடந்து முடிந்தது. நல்ல வேளை கமாலுக்கு எந்த ஆபத்தும் இல்லை. தந்தைக்குத்தான் பலமான அடி. அவ்வழியாக வந்துகொண்டிருந்த பரீதின் தந்தை விபத்தைக் கண்டதும் ஓடி வந்து உடனடியாக கமாலின் தந்தையை வைத்தியசாலையில் அனுமதித்தார்.

இரண்டு நாட்கள் கழிந்ததும் கமாலின் தந்தை கண்விழித்தார். அவரை வைத்தியசாலைக்கு தூக்கிவந்தது பரீதின் தந்தை என்று அறிந்ததும் அவருக்கு தனது தவறு புரிந்தது.

'ஏழைகள் என்றாலும் உதவிசெய்யத் தயங்காதவங்க நீங்க. எல்லோரும் மனிதர்கள்தான். இனிமேல் ஏழை, பணக்காரன் என்று பேதம் பார்க்கமாட்டேன். தெரியாமல் உங்கள் மகனை அடித்துவிட்டேன். என்னை மன்னித்துக்கொள்ளுங்க' என்று மன்னிப்புக் கேட்டார் கமாலின் தந்தை.

அதன் பிறகு பரீதையும் தனது மகனாக எண்ணி அவனுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்கள் யாவற்றையும் வாங்கிக்; கொடுத்தார். சிறியவர்களின் அன்பால் கவரப்பட்ட கமாலின் தந்தை எல்லோரையும் மதித்து வாழப் பழகிக்கெண்டார்.

படிப்பினைகள் –
01.மனிதர்கள் யாவரையும் சமமாக மதிக்க வேண்டும்.
02.நல்ல நட்பு நன்மையையே தரும்.

மின்ட்டு

கதைச் சுருக்கம் மின்ட்டு பறந்து சென்று கொண்டிருந்த போது ஒரு பழுத் பலாப் பழத்தின் வாசைன அதன் மூக்கை துளைத்தது. அதைச் சாப்பிட ...